சித்த யோகி

சித்தம்

                                                                 



அழுகணிச் சித்தர் பாடல்கள்
கலித்தாழிசை

    மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
    கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
    பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
    மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
    விளையாட்டைப் பாரேனோ! 1

    எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
    பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு
    அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
    நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா!
    நிலைகடந்து வாடுறண்டி! 2

    முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
    பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
    அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
    குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா!
    கோலமிட்டுப் பாரேனோ! 3

    சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
    உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
    முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
    தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா!
    தின்றுகளைப் பாரேனோ! 4

    பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
    செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
    அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
    கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
    கண்குளிரப் பாரேனோ! 5

    எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
    விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
    கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
    அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
    ஆண்டிருந்தா லாகாதோ! 6

    கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
    நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
    நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
    கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
    குடியோடிப் போகானோ! 7

    ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
    மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
    மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
    ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
    உன்பாதஞ் சேரேனோ! 8

    வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
    தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
    தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
    வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
    வாழ்வெனக்கு வாராதோ! 9

    பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
    மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,
    மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
    பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
    பாழாய் முடியாவோ! 10

    மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
    காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
    மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
    காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
    கண்விழிக்க வேகாவோ! 11

    அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
    மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
    சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
    வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
    மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ! 12

    காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
    நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
    நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
    காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
    கண்குளிரக் காண்பேனோ! 13

    உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
    மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்
    கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
    வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
    வகைமோச மானேண்டி! 14

    மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
    நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
    நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
    மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
    முழுதும் தவிக்கிறண்டி! 15

    காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
    பாமவலி தொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
    பாமவலி தொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
    காமமலர் மூன்றும் என் கண்ணம்மா!
    கண்ணெதிரே நில்லாவோ! 16

    தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி
    வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
    வெங்காயந் தின்னாமல் மேற்றொல்லைத் தின்றலவோ
    தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!
    சாகிறண்டி சாகாமல்! 17

    பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
    உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
    உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
    பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!
    பாசியது வேறாமோ! 18

    கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
    உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
    உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
    சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
    துணையிழந்து நின்றதென்ன ? 19

    கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
    உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
    உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
    கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
    காரணங்கள் மெத்தவுண்டே! 20

    சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
    மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
    பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
    இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!
    இவ்வேட மானேண்டி! 21

    பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
    வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
    செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டித்
    தந்த மருந்தாலே என் கண்ணம்மா!
    தணலாக வேகுறண்டி! 22

    கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
    பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்குப் பாரமடி
    பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
    கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா!
    கடுகளவு காணாதோ! 23

    பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
    விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
    விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
    பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
    படைமன்னர் மாண்டதென்ன ? 24

    ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
    சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
    வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
    நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
    நொடியில்மெழு கானேனடி! 25

    தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
    மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
    மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
    தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
    தந்தையரு மொப்பாமோ ? 26

    அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
    நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
    கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
    அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
    ஆண்டிருந்தா லாகாதோ! 27

    உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
    தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
    தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
    உன்னை மறக்காமல் என் கண்னம்மா
    ஒத்திருந்து வாழேனோ ? 28

    காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி
    மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
    ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
    மாயச் சுருளோலை என் கண்ணம்மா
    மடிமேல் விழுந்ததென்ன ? 29

    சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
    உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
    உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்
    சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!
    சிலையுங் குலையாதோ! 30

    புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
    பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
    பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
    புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
    பொருளெனக்குத் தாராயோ ? 31

    வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
    குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
    குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
    வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
    விழித்துவெளி காட்டாயோ! 32

    ஐங்கரனைத் தொண்ட னிட்டேன் - ஆத்தாடி
    அருளடைய வேணுமென்று
    தாங்காமல் வந்தொருவன் - ஆத்தாடி
    தற்சொரூபங் காட்டி யென்னை 33

    கொள்ள பிறப்பறுக்க - ஆத்தாடி
    கொண்டான் குருவாகி
    கள்களப் புலனறுக்க - ஆத்தாடி
    காரணமாய் வந்தாண்டி. 34

    ஆதாரம் ஆறினையும் - ஆத்தாடி
    ஐம்பத்தோர் அக்கரமும்
    சூதான கோட்டையெல்லாம் - ஆத்தாடி
    சுட்டான் துரிசறவே. 35

    வாகாதி ஐவரையும் - ஆத்தாடி
    மாண்டுவிழக் கண்டேண்டி
    தத்துவங்க ளெல்லாம் - ஆத்தாடி
    தலைகெட்டு வெந்ததடி. 36

    மஞ்சன நீராட்டி - ஆத்தாடி
    மலர்பறித்துத் தூவாமல்
    நெஞ்சு வெறும்பாழாய் - ஆத்தாடி
    நின்றநிலை காணேண்டி. 37

    பாடிப் படித்து - ஆத்தாடி
    பன்மலர்கள் சாத்தாமல்
    ஓடித் திரியாமல் - ஆத்தாடி
    உருக்கெட்டு விட்டேண்டி. 38

    மாணிக்கத்து உள்ளளிபோல் - ஆத்தாடி
    மருவி யிருந்தாண்டி
    பேணித் தொழுமடியார் - ஆத்தாடி
    பேசாப் பெருமையன் காண். 39

    புத்தி கலங்கியடி - ஆத்தாடி
    போந்தேன் பொரிவழியே
    பதித்தறியாமல் - ஆத்தாடி
    பாழியில் கவிழ்ந்தேனே. 40

    தோற்றம் மொடுக்கம் இல்லா - ஆத்தாடி
    தொல் பொருளை அறியார்கள் . . .

    (முடிந்தது)
    இராமதேவர் - பூஜாவிதி

    ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
    அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
    சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
    சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
    நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
    நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
    வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
    விளங்கவும் பூசையிது வீண் போகாதே. 1

    போகாமல் நின்ற தோரையா நீதான்
    பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றே
    ஆகாம லானந்த வல்லி யாலே
    அடிமுடியி னடுவாசி யாறுக் குள்ளே
    வாகாமல் வாலையுடை மூலத் தாலே
    வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்க வேணும்
    சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
    சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே. 2

    முக்கோண மூசுழிதற் கோண மாகி
    முதலான மூலமணி வாலை தன்னில்
    நாற்கோண நாலுவரை நயந்து காக்க
    நாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்றுத்
    தீக்கோணத் திக்குதிசை யிருந்த மாயம்
    தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக
    தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
    தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே. 3

    சித்தான மூன்றெழுத்துச் செயலாஞ் சோதி
    சீரியவை யுங்கிலியும் சவ்வு மாகி
    முத்தான லட்சவுரு செபிக்கச் சித்தி
    முற்றிடுமே யெதிரியென்ற பேய்கட் குந்தான்
    வித்தான வித்தையடா முட்டும் பாரு
    விரிவான முகக்கருவு மூன்று கேளு
    சத்தான அதன்கருவும் சிலையில் வைத்துச்
    சதுரான விதிவிவர மறியக் கேளே. 4

    கேளப்பா பலிகொடுத்துப் பூசை செய்து
    கிருபையுள்ள வுருவேற்றித் திட்ட மாக
    வாளப்பா சுடுகாட்டின் சாம்பல் தன்னில்
    வளமாகப் புதைத்துவிடு நடுச் சாமத்தில்
    ஆளப்பா அடியற்று மரண மாகி
    ஆண்டிருந்த தவசுநிலை தான்கு லைந்து
    காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி
    கதைதெரியச் சொல்லுகிறேனின்னம் பாரே. 5

    இன்னமின்னங் கண்முன்சோ தனையு மாகும்
    ஈடேற வேணுமென்றா லிதனிற் சூட்சம்
    அன்னமின்னா அகிற்கட்டை தேவ தாரம்
    அறிவுடைய முளைச்சீவிச் சிங்கை யோதி
    வன்னமின்னார் பேர்சொல்லி நசியென் றேதான்
    வலுவான நூற்றெட்டு வுருவம் போடு
    சன்னமின்னா மரத்தடியி லிருந்து கொண்டு
    சதிராக ஆணிகொண் டடித்தி டாயே. 6

    அடித்தமுளை பிடுங்கிவைத் திறுக்கிப் போடு
    ஆனந்த வுருக்குலைந்து பட்டுப் போகும்
    தொடுத்தமுதல் நாலாநாள் கண்டு தானுந்
    தொகைமுடிந்து வாச்சுதடா விந்தப் போக்கு
    விடுத்தபின்பு விடமேறிக் கருவிப் போகும்
    விரிந்துரைத்தேன் பூட்டிதுவே வீண் போகாது
    தடுத்துவிடு நகரத்தி லடித்துப் பாரு
    தட்டழிந்து உயிர்புதலாய்ச் சேத மாமே. 7

    ஆமப்பா அடிதரிசிங் களத்தி லானால்
    அதியங்காண் கண்டவர்க்கே யடைக்க லம்போம்
    வீமப்பா வெளிதிறந்து சொன்னேன் பாரு
    விளையாட்டே யில்லையடா இந்தப் போக்கு
    சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கிச்
    சுருக்கெனவே தியானிப்பா யாத்தாள் மூலம்
    தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு
    தவறாது ராமனுடை வாக்யந் தானே. 8

    தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு
    தனதான நூற்றெட்டுக் குள்ளே சித்தி
    ஆனென்ற அண்டர் பதியெட்டு மாடும்
    அறுபத்து நால்மூலி யெல்லா மாடும்
    கோனென்ற கோடு சித்துக் கணத்திலாடுங்
    குணமாக ரேவதிநாட் செய்ய நன்று
    வானென்ற அட்டமியிற் செய்ய நன்று
    வளர்பிறையில் செய்தவனே யோகி யாமே. 9

    யோகியா யாவதற்கீ துனக்குச் சொன்னேன்
    ஓகோகோ முன்னுரைத்த மூலத் தாலே
    யோகிகளா யேகாந்த வல்லி யாட்கிங்
    ஏட்டிலே யெழுதினதால் எல்லா மாச்சு
    தாகிகளாயத் தாயுடைய கிருபை யாலே
    தவமாகும் மவமாகும் சுபமுண்டாகும்
    மோகிகளால் மூலபூசா விதிபத் தாலே
    முத்திபெறச் சித்திவிளை பத்து முற்றே. 10

    (முடிந்தது)
    கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு

    பல்லவி

    பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
    கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
    பாபஞ்செய் யாதிரு மனமே.

    சரணங்கள்

    சாபம் கொடுத்திட லாமோ ? - விதி
    தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
    கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை
    கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 1

    சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
    சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
    நல்லபத்த திவிசு வாசம் - எந்த
    நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2

    நீர்மேற் குமிழியிக் காயம் - இது
    நில்லாது போய்விடும் நீயறிமாயம்
    பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
    பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3

    நந்த வனத்திலோ ராண்டி - அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
    கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
    கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4

    தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
    சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
    ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்
    திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே. 5

    நல்ல வழிதனை நாடு- எந்த
    நாளும் பரமனை நத்தியே தேடு
    வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
    வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. 6

    நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
    நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
    பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
    பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7

    வேத விதிப்படி நில்லு - நல்லோர்
    மேவும் வழியினை வேண்டியே செல்லு
    சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
    சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8

    பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
    பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
    இச்சைய துன்னையாளாதே - சிவன்
    இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

    மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
    வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
    அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
    அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10

    மெய்குரு சொற்கட வாதே - நன்மை
    மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
    பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
    புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 11

    கூடவருவ தொன்றில்லை - புழுக்
    கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
    தேடரு மோட்சம தெல்லை - அதைத்
    தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12

    ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
    ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
    முந்தி வருந்திநீ தேடு - அந்த
    மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13

    உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
    ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
    கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
    கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14

    காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
    கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
    பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
    பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15

    பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
    போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
    மெய்யாக வேசுத்த காலம் - பாரில்
    மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16

    சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
    சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
    அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
    ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17

    பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்
    பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
    சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
    சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18

    அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
    மானந்தத் தேவியின் அடியிணை மேவி
    இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
    ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19

    ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
    கான வழியை யறிந்து நீகொண்டு
    சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
    சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20

    ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
    தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
    வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
    வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21

    எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
    எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
    வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
    வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22

    இந்த வுலகமு முள்ளு - சற்றும்
    இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
    செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
    சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

    பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
    போதகர் சொற்புத்தி போத வாராதே!
    மையவிழி யாரைச் சாராதே - துன்
    மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

    வைதோரைக் கூடவை யாதே: - இந்த
    வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
    வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
    வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25

    சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
    தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
    தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
    சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26

    பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
    பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
    வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
    வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27

    போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
    புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
    சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
    தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28

    கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
    காட்டி மயங்கிய கட்குடி யாதே!
    அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
    அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29

    பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த
    பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
    சத்திய மென்றதை யீட்டி - நாளும்
    தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30

    செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
    சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
    ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
    ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31

    எவ்வகை யாகநன் னீதி - அவை
    எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
    ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
    ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32

    கள்ள வேடம் புனையாதே - பல
    கங்கையி லேயுன் கடன் நனையாதே
    கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
    கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33

    எங்கும் சுயபிர காசன் - அன்பர்
    இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
    துங்க அடியவர் தாசன் - தன்னைத்
    துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

    (முடிந்தது)
    குதம்பைச் சித்தர் பாடல்கள்

    கண்ணிகள்

    வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
    பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
    பட்டயம் ஏதுக்கடி ? 1

    மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
    கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
    கற்பங்கள் ஏதுக்கடி ? 2

    காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
    வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
    வீணாசை ஏதுக்கடி ? 3

    வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
    சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
    சஞ்சலம் ஏதுக்கடி ? 4

    ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
    வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
    வாதாட்டம் ஏதுக்கடி ? 5

    நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
    முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
    முத்திரை ஏதுக்கடி ? 6

    தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
    மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
    மந்திரம் ஏதுக்கடி ? 7

    சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
    உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
    உத்தியம் ஏதுக்கடி ? 8

    நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
    வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
    வாட்டங்கள் ஏதுக்கடி ? 9

    முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
    சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
    சத்தங்கள் ஏதுக்கடி ? 10

    உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
    இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
    இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 11

    வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு
    மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
    மோகாந்தம் ஏதுக்கடி ? 12

    சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
    ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
    ஏகாந்தம் ஏதுக்கடி ? 13

    அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
    தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
    தந்திரம் ஏதுக்கடி ? 14

    ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
    ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
    ஞானந்தான் ஏதுக்கடி ? 15

    சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
    பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
    பத்திரம் ஏதுக்கடி ? 16

    முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
    சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
    சட்கோணம் ஏதுக்கடி ? 17

    அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
    நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
    நட்டணை ஏதுக்கடி ? 18

    முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
    பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
    பத்தியம் ஏதுக்கடி ? 19

    அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
    பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
    பல்லாக்கு ஏதுக்கடி ? 20

    அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
    முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
    முட்டாங்கம் ஏதுக்கடி ? 21

    வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
    யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
    யோகந்தான் ஏதுக்கடி ? 22

    மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
    பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
    பூத்தானம் ஏதுக்கடி ? 23

    செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
    கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
    கைத்தாளம் ஏதுக்கடி ? 24

    கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்
    கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
    கொண்டாட்டம் ஏதுக்கடி ? 25

    காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
    கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
    கோலங்கள் ஏதுக்கடி ? 26

    வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
    உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
    உண்காயம் ஏதுக்கடி ? 27

    மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
    தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
    தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? 28

    பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
    முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
    முட்டாக்கு ஏதுக்கடி ? 29

    தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
    தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
    தேவாரம் ஏதுக்கடி ? 30

    தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
    பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
    பின்னாசை ஏதுக்கடி ? 31

    பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
    உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
    உத்தாரம் ஏதுக்கடி ? 32

    (முடிந்தது)
    சட்டைமுனி ஞானம்

    எண்சீர் விருத்தம்

    காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்
    கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
    பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
    புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
    நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
    நம்முடைய பூசையென்ன மேருப் போலே
    ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
    உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே. 1

    தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
    சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
    தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்
    சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
    வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
    வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்
    கோனென்ற வாதசித்தி கவன சித்தி
    கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே. 2

    கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்
    குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
    மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
    மைந்தனே இவளை நீபூசை பண்ணத்
    தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
    திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு
    ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
    அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே. 3

    பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய்
    பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு
    வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
    மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்
    கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்
    காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை
    உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன
    உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! 4

    தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
    சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே
    மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
    மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ?
    தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்
    சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு
    துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
    சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே. 5

    பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ?
    பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ?
    வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
    மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ?
    காழான உலகமத னாசை யெல்லாங்
    கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற
    கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
    கூடுவது மேதனென்றால் மூலம்பாரே. 6

    (முடிந்தது)
    திருமூல நாயனார் ஞானம்

    அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி
    அகாரமெனுமெழுத் ததுவே பாதமாகி
    முடியாகி நடுவாகி மூலந் தன்னில்
    முப்பொருளுந் தானாகி முதலுமாகிப்
    படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற்
    படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகி
    அடியாகு மூலமதே அகார மாகி
    அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே. 1

    அதுவாகி அவனளாய் எல்லா மாகி
    அடிநடுவு முடிவாகி யகண்ட மாகிப்
    பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம்
    புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி
    மதுவாகி வண்டாகிச் சுவையு மாகி
    மலராகி மணமாகி மதிக்க வொண்ணா
    அதுவாரும் அகாரமதே மூலமாகி
    அண்டமெல்லாந் தாங்கிநின்ற அம்மூலமே. 2

    மூலமெனு மாதார வட்டந் தானே
    முச்சுடரு முக்கோண மூன்று நாடிச்
    சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்தந்
    திருவடியுந் திருமேனி நடமுமாகும்
    கோலமுடன் அன்ட மெல்லாந் தாங்கிக்கொண்டு
    கொழுந்து விட்டகம்பமதாய் மேலேநோக்கி
    ஆலமுண்ட கண்டமெலாந் தானாய் நின்ற
    அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்துபாரே. 3

    அரிந்ததுவுந் தற்பரமே அகார மாகும்
    அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்
    பிறந்ததுவு முலகமெலாஞ் சமயந் தானாம்
    பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்
    அறிந்ததுவும் அகாரமெனும் பாதந் தன்னை
    அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே. 4

    நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை
    நுண்பொருளாஞ் சிற்பரத்தினூடே நோக்கு
    தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித்
    திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப்
    போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்
    புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்
    ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே
    அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே. 5

    ஆசானு மீசானு மொன்றே யாகும்
    அவனவளு மொன்றாகும் அது தானாகும்
    பேசாத மந்திரமு மிதுவே யாகும்
    பேரொளியின் வடிவாகும் பேரு மாகும்
    நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்
    நிலையான ஓங்கார பூட மாகும்
    ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்
    கின்பமுடன் கயிலாச மெய்த லாமே. 6

    எய்தரியா பரசிவத்தின் மூலந் தன்னில்
    இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று
    மெய்த்தொழுயுஞ் சுழுமுனையே கம்ப மாகி
    மெய்ப்பொருளாஞ் சோதி யென மேவி நிற்கும்
    இவ்வகையே மூலமெனும் பாதந் தன்னை
    இருநேர மர்றிடத்தே யிறைஞ்சிக் காணே. 7

    காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்
    காணரிய பொருளாகுங் காட்டும் போதே
    ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி
    அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி
    வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் கானா
    வெறும்பாழ தாகியே மேவி நின்றார்
    சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத்
    தேடரிய பாதவென்றே தெளிந்து நோக்கே. 8

    தெளிவரிய பாதமது கார மாகிச்
    சிற்பரமுந் தற்பரமுந் தானேயாகி
    அழிவரிய சோதியது தானே யாகி
    அடிநடுவு முடியாகி யமர்ந்து நின்று
    மொழிவரிய முதலாகி மூலமாகி
    முச்சுடர்ந் தானாகி முடிந்த் சோதி
    சுழியினிலே முனையாகிக் கோப மாகிச்
    சொல்லரிய வெழுத்தொன்றே தொகுத்துப் பாரீர். 9

    (முடிந்தது)
    திருவள்ளுவர் ஞானம்

    காப்பு

    அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
    அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி!
    மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
    மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!
    எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
    இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
    குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி!
    குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி! 1

    கட்டளைக் கலித்துறை

    அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் துமதிலேயிருந்தும்
    நன்னயமாயய்ப் பத்துத்திங்களு நானகத் தேயிருந்தேன்
    என்ன அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
    உன்னதமெல்லா மமைந்தேன் உண்மையைக் காண்கிலரே. 1

    அம்புவி தன்னிலேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை
    வம்புலகத் தார்வசிய மாய்க்கைப் பிடித்தேபிரிந்து
    கும்பி தனிலேயுழன்று மக்குண்டலி பொற்கமலம்
    நம்பியிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே! 2

    தரவு கொச்சகம்

    அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
    கண்டிதமா யான்விளங்குக் காயமதி லேயறியும்
    வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயழித்தேன்
    விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே. 3

    வையமதி லேயுதிக்கு மாண்பர்கனே யுங்களுயிர்
    மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்?
    அய்யமில்லா வாழ்ந்துலகில் ஆண்மையாய்ப் பூண்டமதிப்
    பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே! 4

    கட்டளைக் கலித்துறை

    வீடானமூலச் சுழிநாத வீட்டில்விளங்கும் விந்து
    நீடாழி லோகந்தழைத்துப் பெருகியு நின்றிலகுந்
    தேடாதழித்த பொருளான பொக்கிடந் தேடியென்ன
    காடானநாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே! 5

    எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியிலெய்திடினும்
    பொழியச் சுரோணிதம் நாதவிந்து பொருள் போதகத்தால்
    கழியக்கழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
    தழியப் பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே! 6

    எந்நா ளிருந்தென்ன முன்னாளனுப்படி யிந்தவுடல்
    தன்னா லழிவதுந் தானறியாதெனத் தந்தைவிதி
    உன்னலழிவ துடலுயிர் காயமொழிவ துங்கண்
    டந்நா ளனுப்படி கண்டுபிருந் தறியாதவரே ? 7

    யோனிக்குளாசை யழியா தனித்தியம் உங்களுயிர்
    தேனிக்குள் இன்பஞ்சுகாதித மோவருஞ் சிற்றின்பத்தில்
    ஊனற்றுக்காய முடலற்று போம்பொழு தொன்றறியா
    ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகாடொழிய இனியில்லையே. 8

    நேரிசை வெண்பா

    இந்தவுடல் காயம் இறந்துவிடு மிவ்வுலகில்
    வந்தவழி தானறியா வாழ்க்கை - இந்தவுடல்
    அற்பக் குழியி லரவ மிருப்பதெனும்
    கற்பகத்தை யாண்டிடுமோ காண். 9

    ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
    பானமதை யுண்டு பசியினால் - ஞானமது
    கண்டால் உடலுயி ருங்காயம் வலுவாகும்
    உண்டால் அமிர்தரச முண். 10

    சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்ன
    வழியறியார்க் கென்ன எய்துமாறு - சுழியறியா
    மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
    காலனவர்க் கேமரணங் காண். 11

    வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில்
    நாதனரு ளால்பதவி நாடுமே - வேதமறை
    னாலு பொருளுள் நற்பொருளின் ஆற்றியப்
    பாலுமது நெய்யெனவும் பார். 12

    முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
    பதறா மதிபாடு பட்டேன் - முதலிருந்த
    நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து
    வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு. 13

    காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின்
    மாயசித்தி மூலசுழி வாய்க்குமே - காயசித்தி
    மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுது இனிக்
    காலமென்னி ரண்டாண்டில் காண். 14

    கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு
    வல்வினைக் குள்ளாகி மரணமார் - கல்லுப்பு
    வெள்ளைக் கல்லுப்பு வெகுவிதமாய் வந்தாலும்
    உள்ளமதி லுண்டென்றே உன். 15

    என்றும்இந் துப்பாகும் எண்சாணு டலிருக்கக்
    கண்டுமறி யாததென்ன காரணமோ - என்றுமதி
    வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
    வீரியமா யானுணரு மெய். 16

    உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால்
    மூப்புசுன்ன மாவதற்கு முன்னமே - உப்பதனால்
    கற்பாந்தங் கோடி காய மிதுவலுத்துச்
    சொற்பாயும் வாசியில் தேகம். 17

    அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போல்
    அஞ்சு வசப்படுவ தாண்டதனில் - அஞ்சினையும்
    கண்டறி வோர்ஞானக் கார்சி யதினினைவு
    விண்டறிய லாமே விதி. 18

    எண்சாணாந் தேக மெடுத்தாலென் னாண்டையே
    பெண்சாரல் நீக்கியே பேரின்பம் - க்ண்காணத்
    தேக மொழியாமல் சித்தி பெறுஞானம்
    யோகசித்தி போசைவிதி யுன். 19

    (முடிந்தது)


This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free